உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்யா ஐரோப்பாவில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகளின் யுகம் ஒன்றை மீளத் தொடக்கியுள்ளது.
அதனை அனுமதிக்க முடியாது. இந்தப் போரை நிறுத்துவதில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. ஏனெனில் நாம் அனைவரும் அதற்கான விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இவ்வாறு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைனை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை ஆக்கிரமித்த பிரதேசங்களில் நடத்த மொஸ்கோ தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்ரோன் தனது உரையில் அந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
உக்ரைனை இணைப்பதற்கு ரஷ்யா எடுக்கின்ற முடிவுகள் ஐரோப்பாவில் அது போல வேறு நாடுகள் இணைக்கப்படுவதற்கான போர்களைத் தோற்றுவிக்கலாம். நாளை ஆபிரிக்காவிலோ அல்லது ஆசியாவிலோ லத்தீன் அமெரிக்காவிலோ கூட நாடுகள் நாடுகளை இணைப்பதற்கான போர்கள் வெடிப்பதற்கு வழிவகுக்கலாம் – என்று மக்ரோன் எச்சரித்தார்.
இந்தப் போரில் நடுநிலைமை வகிக்கின்ற நாடுகள் வரலாற்றில் தவறிழைக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்வருமாறு அந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
“இன்று மௌனமாக இருப்பவர்கள் ஒரு புதிய ஏகாதிபத்தியவாதத்துக்கும் சர்வதேச ஒழுங்கைச் சிதைக்கும் சமகால சுயநல மனப்பான்மைக்கும் உடந்தையாக இருக்கிறார்கள். அமைதி சாத்தியமே இல்லை என்ற உலகை
உருவாக்க உடந்தையாகின்றார்கள் “-என்று தனது உரையில் ரஷ்யாவின் போரைக் கண்டிக்காத நாடுகளைச் சாடினார் மக்ரோன்.