வட கொரியாவிடம் இருந்து பீரங்கி உள்ளிட்ட பல ஆயுதங்களை ரஷ்யா வாங்குகிறது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யாவின் திறன் குறைந்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நியூயோர்க் ரைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகளை உள்ளடக்கிய ஆயுதங்களை வட கொரியாவிடம் இருந்து ரஷ்யா வாங்கியுள்ளதாகவும் இது போன்ற மேலும் பல இராணுவத் தளபாடங்களை வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் அவற்றின் செயல்திறனை நிரூபிப்பதில் தோல்வி அடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நூற்றுக்கணக்கான மொஹஜர்-6 (Mohajer-6) மற்றும் ஷாஹெட்-சீரிஸ் ஆளில்லா விமானங்களை (Shahed-series unmanned aerial vehicles) வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையே ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளை மீட்கும் தாக்குதல்களை உக்ரைன் சமீபத்தில் பல இடங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும், கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆயுத-தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மேற்கத்திய நாடுகளின் ரஷ்யா மீதான தடைகளும் அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.