வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை

ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடன் வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளதால், கடனைப் பெற்றுக்கொண்ட சிலருக்கு தமது சம்பளம் முழுவதையும் கடன் தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய வட்டியை சலுகைக் காலத்தில் செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிதிக் கொள்கைகளின் மூலம், அடுத்த வருட இறுதிக்குள் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதமாகக் குறைவடையும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles