75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் முதலில் ஜனாதிபதியை சந்தித்ததுடன், அவர்களின் கலந்துரையாடலின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் பாராட்டினார்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வந்துள்ள பூட்டான் கல்வி அமைச்சர் ஜெய் பிர் ராயை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்த பின்னர். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர்களின் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. குறிப்பாக சுற்றுலாத் துறைகளில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதிக்கும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஏ.கே. அப்துல் மொமனுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.

பின்னர் பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ஹினா ரப்பானி கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். பொருளாதார மீட்சி முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாகிஸ்தான் இராஜாங்க அமைச்சர், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பையும் விடுத்தார். வணிக உறவுகள் மற்றும் குறிப்பாக மத சுற்றுலாத் துறையில் சுற்றுலா வளர்ச்சி குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தின.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் பிமலா ராய் பௌடியாலும் ஜனாதிபதியை சந்தித்து, காலநிலை மாற்றத்தை கையாள்வதில் ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்றார். இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் நேபாள அமைச்சர் தெரிவித்தார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
