வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு- 81 இலட்சம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர், இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் தாதியர் சேவை மற்றும் விடுதி துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரை ஏமாற்றியமை விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளது.

ஹலவத்தை நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்வதற்கான உத்தரவு கிடைத்திருந்த நிலையில், நிகவெரட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு குறித்த 33 பேரையும் ஏமாற்றியவர், ஹலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles