அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தி தீர்மானமொன்றை எடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (17) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை நீக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்து தொடர்பிலும், அதற்கு அரசாங்கத்துக்குள்ளேயே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.
” ஓர் விடயம் தொடர்பில் பலகோணங்களில் கருத்தாடல் இடம்பெறுவதுதான் ஜனநாயக அம்சமாகும். ஆளுங்கட்சி உறுப்பினர்களாகிய நாம் குழுக்கூட்டங்களின்போது விவாதிப்போம், காரசாரமான முறையில் கருத்துகளை முன்வைப்போம். இது ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும்.
அரசியலமைப்பின் ’13’ ஆவது திருத்தச்சட்டத்தின் முக்கியத்துவம், அதனை எதிர்காலத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதேவேளை குறித்த சட்டத்தை நீக்குவதாக இருந்தால் அது பற்றியும் ஆழமாக ஆராயவேண்டும்.
13ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை சம்பந்தமாகவும் ஆராய்ந்தே தீர்மானத்துக்கு வரக்கூடியதாக இருக்கும்.” – என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.