வட்டவளை தியகல தோட்ட பாடசாலைக்கு செல்லும் பாதையானது இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
எனவே இப்பாதையை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் தோட்டமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
நோட்டன் மஸ்கெலியா வீதியானது ஒப்பந்தகாரர்களால் அகலப்படுத்தி செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.அந்தவகையில் பாதையை அகலப்படுத்தும் போது வட்டவளை தியகல தோட்ட பாடசாலைக்கு செல்லும் பாதையோடு அமைந்த நோட்டன் பிரதான பாதையும் அகலப்படுத்தப்பட்டது.
இதனால் பாடசாலைக்கு செல்லும் பாதை அமைந்த பகுதியில் மண் திட்டை வெட்டிய போது பாதையும் குறுகியதாகியது.. நோட்டன் வீதியை அகலப்படுத்தும் போது பாடசாலை பாதையின் ஆரம்ப பகுதியில் கொங்றீட் பாதையை உடைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நோட்டன் பாதையை அகலப்படுத்தி மண் மேட்டினை அகற்றும் போது இப்பாதையும் சீர் செய்து தருவதாக உறுதி வழங்கியிருந்த போதும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லையென மக்கள் தெரிவித்தனர். இதனால் இப்பாதையை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு வகையிலும் அசௌகரியங்களுக்கு முகம்காெடுத்து வருகின்றனர். மண் திட்டை வெட்டி அகற்றிய பாடசாலைக்கு செல்லும் வளைவில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுகின்றது.
மழை காலங்களில் பாதையுள்ள மண் அரித்து செல்வதால் பாதையும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.மேலும் குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதியின் வளைவு பகுதியில் அடிக்கடி நிகழும் மண்சரிவினால் பாதையின் வழியே செல்லும் வடிகால்களிலும் மண் திட்டுக்கள் குவிந்து காணப்படுகின்றது. இதனால் வடிகால் வழியே செல்ல வேண்டிய நீர் பாதையில் செல்வதால் மேலும் பாதை அரிப்புக்குள்ளாகி குண்டும் குழியுமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதை பழுதடைந்து காணப்படுவதால் இந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நாேக்கிவருகின்றனர்.
இதுதவிரவும் முச்சக்கர வண்டி சாரதிகளும் இந்த வீதியின் சீரற்ற தன்மையால் வாடகைகக்கு வர மறுப்பு தெரிவிப்பதால் மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்பாதையே தியகல தோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்லும் பிரதான பாதையாக காணப்படுகின்றது.எதிர்வரும் காலங்களில் பாடசாலை ஆரம்பிக்கும் போது அது மாணவர்களுக்கு பல வழிகளிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இவ் வளைவு அமைந்த பகுதி மிக ஆபத்தான பகுதியாக காணப்படுவதால் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.முன்பள்ளி மாணவர்களும் இப்பாதை வழியே தனியாகவே வந்து செல்வார்கள். எனவே இப்பாதையை மிக விரைவில் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.