“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி சாதகமான பதில் கிட்டாவிட்டால் பதவி துறப்பேன்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ சம்பள நிர்ணய சபை கடந்த 10 ஆம் திகதி கூடியபோது அக்கூட்டத்தை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்திருந்தது. இது ஒட்டு மொத்த மலையகத்தையும் புறக்கணித்ததற்கு ஒப்பானதாகும்.
எனவே, எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின்போது பெருந்தோட்டக் கம்பனிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அவதானித்து, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பெருந்தோட்ட நிறுவனங்களை விரட்டியடிப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி எமது உறவுகளின் சம்பவம் தொடர்பில் நியாயமான நடவடிக்கை ஏற்படாவிட்டால் நாம் எமது பதவி, பட்டங்களையெல்லாம் துறந்துவிட்டு, ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.