இலங்கையில் கொரோனாவின் 3ஆவது அலை ஏற்பட்டதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், வைரஸைக்கூட அரசியலுக்காக பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலக நாடுகளுக்கு பரவும் நிலையில் அது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதமே நாம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். எமது கோரிக்கைக்கு செவிமடுத்திருந்தால் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் வருவதை தடுத்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்திருக்கும்.
எனினும், குதிரை ஓடிய பிறகு லாயத்தைமூடுவதுபோலதான் கொரோனா விடயத்தில் அரசின் அணுகுமுறைகள் அமைந்தன. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலின் ஆரம்பப்புள்ளி எது என்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.எனவே, இனியாவது அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
பொதுத்தேர்தலின் பின்னர் கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இரண்டு மாதங்களாக கூடவில்லை எனக்கூறப்படுகின்றது. எனவே, ஜனாதிபதி , சுகாதார அமைச்சர் முதல் மேற்படி செயலணியில் இருந்த அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.
தேர்தல் முடிவடைந்த பிறகு கூடவில்லையெனில் அதற்கு முன்னர் வைரஸைக்கூட அரசியலுக்காகவே இந்த அரசு பயன்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, நேரடி பதில்களை வழங்காமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பற்றியே சுகாதார அமைச்சர் கதைத்தார். எனவே, இலங்கையில் 2ஆவது முறையும் வைரஸ் பரவல் ஏற்பட்டதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனை மறைப்பதற்கும் இன்று வைரஸ் பரவலை பயன்படுத்திவருகின்றனர் ஆளுங்கட்சியினர். நாட்டு மக்களுடன் விளையாட வேண்டாம் என்பதுடன், அவர்களை பலிக்கடாக்களாக்கி அரசியல் நடத்த முற்படவேண்டாம் எனவும் குறிப்பிடுகின்றோம்.” – என்றார்.