கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு: 4 பீடங்களுக்கு இணையவழியில் கற்பித்தல்

மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் விரிவுரைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

கலை , சட்டம் , முகாமைத்துவம் , கல்வி, மற்றும் அறிவியல் ஆகிய பீடங்களின் விரிவுரைகளே இவ்வாறு ஆன்லைன் மற்றும் கலப்பு முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஐவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலிலிருந்து குணமடைவதற்குக் ஓய்வு மிகவும் இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டிய இந்திக கருணாதிலக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கும், அதேநேரம் கல்வி நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காகவுமே இந்த ஆன்லைன் ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குக் பல்கலைக்கழக நிர்வாகம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை முற்றுமுழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக உறுதியளித்த அவர், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, மிக முக்கியமாகப் பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்றும், அவ்வாறு மூடுவதற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles