துடுப்பாட்டத்திலும் அசத்திய அஸ்வின்: ராஜஸ்தான் அணி வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்கள் குவிப்பு, 4 மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசிநேர தோல்வி, விறுவிறுப்பான கடைசி பந்து போட்டிகள் என 2024 ஐபிஎல் தொடரானது எப்போதும் இல்லாதவகையில் முதல் சுற்றிலேயே பல்வேறு விறுவிறுப்பான போட்டிகளை தந்து மிரட்டிவருகிறது.

ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக சென்று நேற்றைய போட்டியில் நடுவர்களுக்கும், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டு களம் ரணகளமாக மாறியது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியானது, RR அணியின் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி பவுலர்கள், விக்கெட் வேட்டை நடத்தினர்.

ஜெய்ஸ்வால் 5 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 11 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, 36 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி தடுமாறியது. பந்தை சரியாக கணிக்க முடியாமல் அடுத்தடுத்து வீரர்கள் வெளியேற, போய்ட்டு விக்கெட்ட விடாம தள்ளிதள்ளி ஆடுங்க என “நைட் வாட்ச்மேன் ரோலில்” அஸ்வினை இறக்கிவிட்டது ராஜஸ்தான் அணி. ஆனால் களத்திற்கு வந்த அஸ்வினோ “இந்த பிட்ச்லயா இவ்வளவு மோசமா அவுட்டானிங்க” என்று பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பினார்.

அதுவரை அவுட்டான வீரர்கள் எல்லோரும் 100 ஸ்டிரைக்ரேட்டில் விளையாட, அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்ட அஸ்வின் 200 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி போட்டியை தலைகீழாக திருப்பினார். அஸ்வின் அடிக்கும்வரை 26 பந்துகளுக்கு வெறும் 26 ரன்களே எடுத்திருந்த ரியான் பராக், அதற்குபிறகுதான் அதிரடிக்கு திரும்பினார்.

செய்யவேண்டிய வேலையை தரமாக செய்துவிட்டு 29 ரன்னில் அஸ்வின் வெளியேற, அதற்கு பிறகு பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய ரியான் பராக் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். கடைசி ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள் 2 சிச்கர்களை பறக்கவிட்ட பராக் 84 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை 185 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் ஒரு ஓவருக்கு மூன்று-மூன்று பவுண்டரிகளாக விரட்டி மிரட்டிவிட, 4வது ஓவரை வீச வந்த பர்கர் மிட்செல்-மார்ஸின் ஸ்டெம்பை காற்றில் பறக்கவிட்டார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பர்கர் டெல்லி அணியை கலங்கடித்தார்.

என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த டேவிட் வார்னர் நம்பிக்கை கொடுக்க, முக்கியமான நேரத்தில் 49 ரன்னில் வார்னரை வெளியேற்றிய ஆவேஷ் கான் டெல்லி அணியின் நம்பிக்கையை உடைத்தார். உடன் ரிஷப் பண்ட்டும், கடந்த போட்டியில் கலக்கிய போரலும் நடையை கட்ட 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

4 ஓவரில் 60 ரன்கள் தேவையென போட்டி மாற டெல்லி அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக கடைசி நம்பிக்கையாக களத்திலிருந்த ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு ராஜஸ்தான் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். ‘முடிஞ்சிடுச்சினு பார்த்தா அடிக்கிறாங்களே’ என சஞ்சுசாம்சன் முழிக்க, கடைசி 2 ஓவருக்கு 32 ரன்கள் என போட்டி இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என மாறியது.

19வது ஓவரிலும் 15 ரன்கள் அடித்த டெல்லி அணி மிரட்டிவிட, பரபரப்பான இறுதிஓவரை நோக்கி நகர்ந்தது போட்டி. ஆனால் கடைசிஓவரை சிறப்பாக வீசிய ஆவேஷ்கான் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முடிவில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. ஆட்டநாயகன் விருது ரியான் பராக்கிற்கு வழங்கப்பட்டாலும், போட்டியின் ஹீரோவாக ரவிச்சந்திரன் அஸ்வினே ஜொலித்தார்.

Related Articles

Latest Articles