இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இத்தொடர் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
3 ஒருநாள் ODI மற்றும் 3 T20 போட்டிகளைக் கொண்ட இந்த வரையறுக்கப்பட்ட ஓவர் தொடர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடைபெறவிருந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இத்தொடர் பிற்போடப்பட்டது.
“அமைச்சர்கள் மட்டத்தில் இதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்த பங்களாதேஷ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமினுல் ஹக் (Aminul Haque), இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் திங்கள்கிழமை உறுதிப்படுத்தினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகித் தனது நட்பு நாடான இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கியுள்ளதால், அன்றிலிருந்து டெல்லிக்கும் டாக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் சுட்டிக்காட்டி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற T20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தனது அணியை அனுப்ப பங்களாதேஷ் மறுத்துவிட்டது.
தனது போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு பங்களாதேஷ் கோரியபோதிலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதற்கு மறுப்பு தெரிவித்து, வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துக் கொண்டது.
“உலகக் கோப்பைத் தொடரைச் சுற்றி உருவான முட்டுக்கட்டையை விரைவாகத் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறிய விளையாட்டுத்துறை அமைச்சர் அமினுல் ஹக், “இறைவனின் அருளால், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா கடைசியாக 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடருக்காக பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என பங்களாதேஷ் ம் வென்றது.
அதன்பின்னர், 2024 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 டெஸ்ட் மற்றும் 2 இருபது20 போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் , இந்தியாவுக்குச் சென்றிருந்தது. அதில் இரண்டு தொடர்களையும் இந்தியா முழுமையாகக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
