சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: கொழும்பு துறைமுக நகர் பற்றி ஆராய்வு

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, முக்கியமாக கொழும்பு துறைமுக நகரத்தை (Port City) மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் தலைவர்கள், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் உயர் நம்பிக்கை காரணமாக இலங்கைக்கு மேலும் பல பாரிய முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் வலியுறுத்தினர்.

இது தவிர, நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, வர்த்தக விநியோகங்கள் மற்றும் டிஜிட்டல் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த ஆர்வமாக இருப்பதாகவும், இலங்கையை அத்துறைசார் மையமாக மாற்றி முதலீட்டு வாய்ப்புகளை ஈர்க்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முதலீட்டு வாய்ப்புகளின் போது 90% உள்ளூர் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் பெருமளவிலான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் சீன நிறுவனங்களின் தலைவர்கள் இங்கு உறுதியளித்தனர்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) வெளிநாட்டு வணிகப் பணிப்பாளர் டாங் சியாவோலியாங் (TANG QIAOLIANG), ஒருங்கிணைந்த பிரிவின் பிரதி முகாமையாளர் ஜி ஹைஜுன் (JI HAIJUN), சீனா துறைமுக பொறியியல் நிறுவனத்தின் (CHEC) பொது முகாமையாளர் ஜாங் சியாவோச்சியாங் (ZHANG XIAOQIANG), CHEC இலங்கை பிரிவின் பொது முகாமையாளர் வாங் காங் (WANG GANG), கொழும்பு துறைமுக நகரத்தின் CHEC முகாமைத்துவப் பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் (XIONG HONGFENG) உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles