ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்றுமாறு அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பஸில் ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.
இதனையடுத்தே கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போது கட்சியில் வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவி நியமனத்துக்கான தேர்வு நடைபெற்றது. குறித்த பதவியை பஸில் ராஜபக்ச ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
2030 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே நாமல் ராஜபக்சவுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
