கருத்தியல் ரீதியான மோதல்களுக்கு தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த முயற்சிப்பது நாகரிகமான அரசியல் செயற்பாடாக இருக்காது. அந்த வகையில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சமூகத்தை தலைகுனியச் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்கையில்,
அரசியல் ரீதியில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான விடயமாகும். கண்டனங்களையும் விமர்சனங்களையும் அந்தந்த வழியிலேயே எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. சம்பள உயர்வு தொடர்பான விடயத்தில் சகலரது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அடாவடித் தனங்களால் எதையும் சாதிக்க முடியாது: மக்களின் வெறுப்புக்குத்தான் ஆளாக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மலையகத்தில் ஒரு காலத்தில் அடிதடி, பழிக்குப் பழி, என்று மக்களைத் தூண்டி விட்டு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடத்திய வன்முறை கலாசாரம் இருந்து வந்தது. அரசியல் ரீதியில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருந்து வந்தது. ஆனால், இன்று அந்தக் கலாசாரம் மலையேறி விட்டது. கடந்த சில வருடங்களாக எந்த விதமான குரோதங்களும் இல்லாமல் சுமுகமான நிலை காணப்படுகின்றது. தொழிலாளர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்ற வழக்குகள் வருடக் கணக்கில் நிலுவையில் கிடப்பதால் அப்பாவி மக்கள் நிம்மதியின்றி இன்றும் அலைந்து திரிந்த வண்ணம் இருக்கின்றார்கள்.
அதேபோல், மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல சிலர் அராஜக அரசியலை கட்டவிழ்த்து விட்டு குளிர்காய நினைக்கின்றார்கள். பிரச்சினைகளுக்கு வன்முறைகள் தான் தீர்வாக அமையும் என்று நினைக்கக் கூடாது. ஒருவர் அடிக்கும் போது மற்றவரும் திருப்பி அடித்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நீண்ட காலமாக நிலவி வந்த அரசியல் போட்டா போட்டிகள் மாறி மலையகம் அமைதியாக இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கி குழப்பங்களை ஏற்படுத்தவும், ஒற்றுமையை சிதறடித்து, அமைதியை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இத்தகைய வன்முறைகள் மேலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது. மலையகத் தலைமைகள் தமது அங்கத்தவர்களை கட்டுப்பாடாக வைத்து கடமை கண்ணியத்தைப் பேணி நிதானமாக செயற்படுவதற்கு அக்கறை காட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.










