ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு ஜுன் 28 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் உட்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்தனர்.
ரைசி மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக தற்போதைய துணை ஜனாதிபதி முகமது முக்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை ஜனாதிபதி அவரின் கடமைகளை செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால ஜனாதிபதி கடமைப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், ஈரானின் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஈரான் நாட்டின் 14வது ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரசாரம் ஜூன் 12ம் திகதி முதல் 27ம் திகதிவரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.

Related Articles

Latest Articles