உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு விளைச்சல் குறிப்பாக காலநிலையில் தங்கியுள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள், கோரிக்கை விடுத்துளளார்கள்.

அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை 2025-01-31 திகதி அல்லது அதற்கு முன்னர்வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Related Articles

Latest Articles