ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டப் புத்தகத்தை இன்று சபையில் வீசியெறிந்ததினால் நாடாளுமன்றத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மனுச நாணயக்கார, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு சந்தேக நபர்களாக இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருவதாக விமர்சித்தார்.
இதற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்க இயலாது என்று குறிப்பிட்டதுடன், நாடாளுமன்றத்தில் அல்லாமல் வெளியிடங்களில் இதனைக்கூறும் படியும் சவால் விடுத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த எதிர்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல, உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களைக்கூட நீக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதாலும், மக்களின் தீர்ப்புக்களை விசாரிக்க நாடாளுமன்றத்தினால் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதால் நீதிமன்ற தீர்ப்பு பற்றி சபையில் பேச முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.
எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்தும், போலியாக நிலையியற் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி குறுக்கீடு செய்ததாலும் சபையில் மேலும் அமளிதுமளி ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் சபையில் எழுந்து நிலையியற் கட்டளைச் சட்டத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார, நிலையியற் கட்டளைச் சட்டங்களை தேவையற்ற வகையில் பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்யவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதால் அவ்வாறு செய்யும்படி சபைக்குத் தலைமைதாங்கிய உறுப்பினரிடம் கோரினார்.
இதனையடுத்து சபை அமைதியின்மை நிறைவுக்கு வந்தது. நிலையியற் கட்டளை புத்தகத்தை சாமர சம்பத் தூக்கி வீசினார்.










