நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை எனவும், சும்மா இருப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து தான் இங்கு வரவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்குரிய முதல்வார நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா,
‘ எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என டிசம்பர் 18 ஆம் திகதி நான் கடிதமொன்றை உங்களிடம் (சபாநாயகரிடம்) கையளித்திருந்தேன். எனக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இன்று (நேற்று) ஜனவரி 07 ஆம் திகதியாகின்றது. எனினும், இன்னும் உரிய பதில் இல்லை.
எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் (நேற்று) எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. உரையாற்ற வாய்ப்பு இல்லையெனில் நாடாளுமன்றம் வந்து என்ன பயன்? நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்றேன். வெறுமனே இங்கு வந்து மேலே பார்த்துவிட்டு செல்வதில் பயன் இல்லை.”- என்றார்.
இது பற்றி எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
