கனடா உட்பட வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது எனவும், அதனால்தான் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இயல்பாக வாக்குகள் கிடைத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஏனெனில் அங்குள்ள குடும்பங்களில் 90 சதவீதமானவற்றில் எவரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பார்;. அவர்கள் அங்கு பலமாக உள்ளனர். எனவே, அங்கிருந்து வரும் தகவலுக்கமைய இங்கு தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படலாம்.
அந்த சக்திகளை (புலம்பெயர்) திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதை காணமுடிகின்றது. இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. நல்லாட்சி காலத்திலும் முகாம்கள் அகற்றப்பட்டன. அத்தியாவசியமானவை எனக் கருதி வைக்கப்பட்டிருந்தவற்றில் இருந்துதான் தற்போது அகற்றல் இடம்பெறுகின்றது.
மஹிந்த ராஜபக்சவை வீட்டில் இருந்து வெளியேற்ற முற்படுகின்றமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முற்படுகின்றமை உட்பட பல நடவடிகைகள் இவ்வாறு டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவருகின்றன.
அநுரகுமார இன்று சுதந்திரமாக யாழ்ப்பாணம் செல்வதற்குகூட, போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச வழங்கிய அரசியல் தலைமைத்தவம்தான் காரணமாகும் என்பதை மறக்கக்கூடாது.” – என்றார்.










