யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் கதைக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தலதாமாளிகைமீது ஜே.வி.பியினர் மேற்கொண்ட குண்டு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோராமல் இருப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ 1989 கிளர்ச்சியின்போது மாக்ஸ்சிசத்துக்காக, சமத்துவத்துக்காக தமது உயிர்களை தியாகம் செய்த தோழர்களை ஜே.வி.பியினர்
இந்த பாதீடு ஊடாக காட்டிக்கொடுத்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகம் தொடர்பில் தனது பாதீட்டு உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். குறித்த பல்கலைக்கழகம்மீது மக்கள் வைத்திருந்த மதிப்பு பற்றியும், அங்கு செல்லும் நபர்கள் பாதணிகளை கழற்றிவைத்துவிட்டே செல்வார்கள் எனவும், பல்கலைக்கழகத்தை எரிப்பதற்கு கட்சியொன்று உதவியது எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் எனது தாயக்கட்சியின் பெயர் (ஐக்கிய தேசியக் கட்சி) அடிபட்டது. சம்பவம் நடந்தபோது எமது இரு அமைச்சர்கள் அங்கு இருந்ததால் ஐக்கிய தேசியக் கட்சி இதனுடன் தொடர்புபட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் சில வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
யாழ். பலக்கலைக்கழகம் பற்றி இன்று பேசும் அநுர குமார திஸாநாயக்க, அன்று ஜ.வி.பி. தலதாமாளிகைமீது குண்டு தாக்குதல் நடத்தியது பற்றி மன்னிப்பு கோரியுள்ளனரா?
தலதாமாளிகைக்கு செய்த அகௌரவம் பற்றி கதைத்துள்ளாரா? இல்லை. முதலில் தம்மை திருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு பாடம் புகட்ட முன்வரவேண்டும்.” – என்றார்.










