” உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தியாவுடன் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனவே, ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக இருந்தால் இரு நாடுகளின் அனுமதி தேவை இல்லை. ஒரு நாடு விரும்பினால் முன்கூட்டியே அறிவித்துவிட்டு வெளியேறலாம்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கமளித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அவை சட்டவிரோதமான ஒப்பந்தங்கள் அல்ல. திருட்டு தனமாகவும் கைச்சாத்திடப்படவில்லை. அமைச்சரவை மற்றும் துறைசார் அமைச்சுகளின் அனுமதியும் பெறப்பட்டே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அதேபோல மேற்படி ஒப்பந்தங்களில் இருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலகிக்கொள்ளலாம். எனினும், மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். சில ஒப்பந்தங்களில் மூன்று மற்றும் ஐந்து வருடங்களென கால எல்லை உள்ளது.
மேற்படி ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். வலுசக்தி தொடர்பில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வலுசக்தி இறையாண்மையை நாம் காட்டிக்கொடுக்கவில்லை.” – என்றார்.










