காசாவில் உக்கிர தாக்குதல்: மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க முயற்சி!

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையிலும், காசாவில் உக்கிர தாக்குதல் தொடர்கின்றது. நேற்று நடந்த தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல கடந்த 48 மணி நேரத்தில் 300 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர்.
காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 611 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில், 14 அமைச்சர்கள், ஜூலை 27 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளிடம் இருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Related Articles

Latest Articles