“அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ கூறுவது உண்மையெனில் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும்.” – என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பேராயரின் கோரிக்கைக்கு அமையவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டார் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இற்றைக்கு 7 மாதங்களுக்கு முன்னர் நான் தெரிவித்த கருத்தையே அமைச்சர் வெளிப்படுத்தி இருந்தார். அதற்காக அவருக்கு நன்றிகள். ஆளுங்கட்சி தரப்பில் இருந்தே எனக்கு மேற்படி தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
எனினும், அவ்வாறு கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அப்படியானால் பேராயர் தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டு சபையை தவறாக வழிநடத்தியமைக்காக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பதவி விலகவேண்டும்.
சிலவேளை பிமல் ரத்நாயக்க கூறுவது உண்மையெனில் தவறான தகவலை சமூகமயப்படுத்தியதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ பதவி விலக வேண்டும். எது எப்படி இருந்தாலும் இருவரில் ஒருவர் கூறுவதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.” – என்றார்.










