முத்தையன்கட்டு சம்பவம் குறித்து நீதியான விசாரணை

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திக் குழு தலைவர், அமைச்சர் சுனில் ஹந்தி நெத்தி தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது.

இருந்தபோதும் அந்த முகாமிற்குள் உள் நுழைந்த சம்பவம் தொடர்பாக 3 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. அங்கு இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் இந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அதேவேளை நியாயமான விசாரணை இடம் பெற்றுவருகின்றது. இதனை மக்களுக்கு நாங்கள் சொல்லுகின்றோம். எனவே தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும்.

அதேவேளை இராணுவ முகாங்களையோ பொலிஸ் நிலையங்களையோ அவசியம் இல்லாமல் அகற்ற வேண்டியது இல்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம்.

நிலப் பிரச்சனை தொடர்பாக இன்று விவாதித்தோம், எனவே எங்கள் முதல் நோக்கம் மக்களின் நிலங்களை பொலிஸ் நிலையங்கள் கையகப்படுத்தி இருந்தால் மாற்று இடத்தை கண்டுபிடிப்பதாகும்.

எனவே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவது அல்ல மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை என்றார்.

Related Articles

Latest Articles