மாகாணசபைத் தேர்தல் – ஆளுங்கட்சிக்குள் கருத்து மோதல்!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை விரைவில் நடத்துமாறு ஒரு சிலரும், அவ்வாறு நடத்தப்படக்கூடாது என மேலும் சிலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரச உயர்மட்டத்திடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

சரத் வீரசேகர, அரசுக்கு சார்பான தேரர்களுமே தேர்தல் நடத்தப்படக்கூடாது என கருத்துரைத்து வருகின்றனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடமத்திய மாகாணசபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். ரஞ்சித்,

” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும். விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எமது கட்சியின் தேசிய அமைப்பாளரோ அறிக்கை எதனையும் விடுக்கவில்லை. ” – என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர,

” ஒரே நாடு, ஒரே சட்டமெனில் நாட்டில் 9 மாகாணங்களில் 9 சட்டங்கள் இருக்கமுடியாது. அந்தவகையில் மாகாணசபை முறைமையை நாம் நிராகரிக்கின்றோம்.  இது தொடர்பான முடிவை அரசாங்கம் எடுக்கும் என நம்புகின்றேன்.

புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டுவருகின்றது. அது வரும்வரை மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.” – என்றார்.

மாகாணசபை முறைமை குறித்து கருத்து வெளியிட்ட அரச சார்பு தேரரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

” மாகாணசபை என்பது இந்தியாவால் வழங்கப்பட்டது. இம்முறைமை வேண்டாம். எனவே, தேர்தல் நடத்தப்படவேண்டியதில்லை. மாகாணசபை தொடர்பான சட்டம் கிழித்தெறியப்படவேண்டும். இதையும்மீறி தேர்தல் நடத்தப்படுமானால் மக்களை அணிதிரட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles