தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்குக் கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவை எனக் கருதி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஒரு பூர்வாங்கக் கலந்துரையாடலை நடத்துவற்கு உத்தேசித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர், “உங்கள் கடிதம் குறித்து கூட்டணிக்குள் ஆராய்ந்து இயன்றளவு விரைவாகப் பதிலளிக்க நடவடிக்கை எடுப்பேன்.” – தெரிவித்துள்ளார்.










