“அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
” 2026 தேர்தல் முடிவில் அதிமுகதான் ஆட்சியமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் உங்களிடம் தெரிவிப்போம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவோம்” எனவும் அவர் கூறினார்.
முன்னதாக இன்று தேனியில் பேசிய ஓபிஎஸ், “டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும்.
இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியேரால்தான் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா?” எனத் தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் இணைய ஓபிஎஸ் மீண்டும் இன்று விருப்பம் தெரிவித்த நிலையில், இபிஎஸ் அதனை உடனடியாக மறுத்துள்ளார். எனவே, இனி ஓபிஎஸ் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.










