“இணைந்து பயணிக்கத் தமிழ்க் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தால், அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.” – என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தேன்.
கடந்த பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளேன். அதை நான் ஒரு சறுக்கலாகவே கருதுகின்றேன்; தோல்வியாக அல்ல.
வருங்காலத்தில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” – எனவும் அவர் கூறினார்.
தனது அண்மைய கைது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “என் கைது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பாக மேலதிகமாக எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், நீதி வெல்லும்; உண்மை விரைவில் வெளிவரும் என நம்புகின்றேன்.” – என்றார்.
“சக தமிழ்க் கட்சிகளுக்கும் எனக்கும் இடையில் நேச முரண்பாடே உள்ளது; பகைமை இல்லை. எனினும், சில தமிழ்க் கட்சிகள் என் மீது காழ்ப்புணர்ச்சி அரசியலுடன், பயத்தின் அடிப்படையில் செயற்படுகின்றன.” – எனவும் டக்ளஸ் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து உறுதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், “எனினும், அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது நல்லது.” – என்றார்.
மேலும், “எனது கட்சியை மேலும் செழுமைப்படுத்தி, வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதே எனது பிரதான நோக்கம்.” – என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
