ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா?

ஈரான்மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க படைகளுடன் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்திவருகின்றார் என தெரியவருகின்றது.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் – தெஹ்ரான் இடையேயான பேச்சு ஜெனீவாவில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை திங்கள்கிழமை முதல் பிரம்மாண்ட போர் பயிற்சியைத் தொடங்கியது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த உலகளவிலான பதற்றத்துக்கு மத்தியில், எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 13 போர்க் கப்பல்கள், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போh்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டவையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது.

இதனிடையே, புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், “ஜெனீவாவில் ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், பல விஷயங்களில் உடன்பாடு எட்டவில்லை. அதுகுறித்து இரு வாரங்களுக்குள் மீண்டும் ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண டிரம்ப் முன்னுரிமை அளிக்கிறார். ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது புத்திசாலித்தனமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும், ஈரானில் நடந்த போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதமும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியது.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாடு குறித்து விதிக்க ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அணுசக்தி மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

Related Articles

Latest Articles