‘Clean Sri Lanka’ செயலகத்தால் முன்னெடுக்கப்படும் ‘சமனொல சிறி – பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சிவனொளிபாத மலை புனித தலத்தின் நல்லதன்னி மற்றும் இரத்தினபுரி பிரவேசப் பாதைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நாள் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
அரச நிறுவனங்கள், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று (19) மு.ப 05.45 க்கு நல்லதன்னி பொலிஸ் நிலையம் அருகில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி மற்றும் ‘Clean Sri Lanka’ செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ‘Clean Sri Lanka’ வேலைத் திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், பிரஜைகளின் மனப்பாங்கு விருத்திக்கான புதிய அணுகுமுறைகளைப் பெறவும் வழிவகுக்கும். மேலும், பெறுமதிமிக்க மற்றும் சுற்றாடல் பாரம்பரிய மதத் தளமாக இந்தப் புனிதப் பிரதேசத்திற்கு, சுற்றுலா ஈர்ப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.
அத்துடன், உணர்திறன் மிக்க சுற்றாடல் வலயமான சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசத்தின் சுற்றாடல் கட்டமைப்புக்கு பாதிப்பை விளைவிக்கும் செயல்கள் அல்லது நடத்தைகளில் ஈடுபடாமல் இருப்பது குறித்தும் இதன்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேற்கண்ட திட்டத்திற்கு இணையாக, பக்தர்களிடையே ஒழுக்கநெறிமுறை பண்புகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு திட்டங்களும் இந்த வருடம் சிவனொளிபாத யாத்திரை காலம் முழுவதும் ‘Clean Sri Lanka’ கருத்தியலின் கீழ் முன்னெடுக்கப்படும்.
அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் ‘ வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, சிறந்த மனப்பாங்குடன் கூடிய ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றாடலை நேசிக்கும் மற்றும் சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மையை மதிக்கும் பிரஜைகளை உருவாக்குவதற்காக ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் சுற்றாடல் தூணின் கீழ் செயற்திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.










