எங்களுக்கு சேறு பூசுவதைவிடுத்து சவால்களை எதிர்கொள்ளுங்கள்: நாமல்

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. குற்றம் சாட்டினார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைகே கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய்க்கு 45 டொலர் மேலதிகமாகச் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எண்ணெய் பெறுவோம் எனக் கூறி மக்களை ஏமாற்றிய அரசு, தற்போது அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி அதன் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது. அதேபோல், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொலிஸார் உள்ளிட்ட அரச நிறுவனங்களை அச்சுறுத்தி, பழைய பொய்களை உண்மை என நிரூபிக்க அரசு முயற்சிக்கின்றது. பொலிஸ்மா அதிபர் நாட்டுக்காகச் செயலாற்ற வேண்டுமே தவிர, ஒரு அரசியல் கட்சியின் தேவைக்காக அல்ல. அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றின் முழுமையான பயனைப் பெற அரசு தவறிவிட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச்சலுகைகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ராஜபக்சக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடினார்கள் என அரசு திட்டமிட்டுப் பொய் கூறுகின்றது. இவ்வாறான பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, அரசு தனது கையாலாகத்தனத்தை மறைக்க எம் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு, நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles