2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.
இதற்கமைய மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண உயர்வு கோரப்பட்டிருந்தது.
எனினும், பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம், ஏற்றுமதி வணிகம் உடப்ட அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு பிரிவுக்குமாக கட்டண உயர்வை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் ஆணைக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
ஊடக சந்திப்பின்போது அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு,
0 – 30 அலகுகளுக்கு 4.3 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாதாந்தம் 15 ரூபா அதிகரிக்கும்.
31 – 60 அலகுகளுக்கு 6.9 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாதாந்தம் 45 ரூபா அதிகரிக்கும்.
61 – 90 அலகுகள் பயன்படுத்தினால் 6.9 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாதாந்தம் 120 ரூபா.
91 – 180 அலகுகளுக்கு 7.2 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாத கட்டணம் 240 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 25 சதவீத அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் புனித பூமிகளுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் மதத்தலங்கள் மற்றும் புனித பூமிகளுக்கு 6.9 சதவீத அதிகரிப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இலங்கையில் ஏற்கனவே எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச்சூழலால் உலகில் பல நாடுகளிலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.











