ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தளவு நிறைவேற்றிவருகின்றது.
இலங்கையில் இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுவருகின்றன. அடக்குமுறை கையாளப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.
இந்த அரசாங்கத்தை தேர்தல்மூலம் தோற்கடிப்பது எமக்கு சவாலான விடயமாக அமையாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் நிறுத்தப்படும் வேட்பாளரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.
