அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, மார்ச் 31 ஆம் திகதி வரை 42% டீசலை சேமித்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரியவந்தது.
ஏப்ரல் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் இணையவழி ஊடாக இயங்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சைகள் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்ததுடன், போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம், நீதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகள் அத்தியாவசிய ஊழியர்களை வரவழைத்தும், இணையவழி ஊடாகவும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
அரச நிறுவனங்களின் எரிபொருள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்தைக் கண்காணிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக அரச நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சேமிக்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு குறித்து அடுத்த குழுக்கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், நீர் விரயமாவதைத் தவிர்த்தல் மற்றும் மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசரத் திட்டமொன்றை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இணையவழி ஊடாகக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக அமைச்சின் உடன்பாட்டுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்படி 2026 ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வழிகாட்டல்களின்படி செயற்படுவதற்குத் தேவையான சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களும் இணையவழி முறையைப் பின்பற்றுவது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், நாளாந்த வலுசக்தி நுகர்வு, கையிருப்பு அளவு, அரச ஊழியர்களின் வருகை போன்றவற்றை Dashboard ஊடாகக் காட்சிப்படுத்தி, உரிய பணிகளைக் கண்காணிப்பதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2026 ஏப்ரல் 08 ஆம் திகதி குழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.










