ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிரேஷ்ட உறுப்பினருக்கான புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கபீர் ஹாசிமுக்கான புதிய தவிசாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் உடனிருந்தார்.
கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான கபீர் ஹாசிம், ஏற்கனவே பல அமைச்சுப் பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர் என்பதுடன், தற்போது நாடாளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில், கட்சியின் தவிசாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.










