“ இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை இந்திய உப ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைக்கும்.” என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் நாளை ஞாயிற்றுகிழமை 19ம் திகதி, இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனுடன் இடம் பெற உள்ள சந்திபின் போது தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில், முன்வைக்க உள்ள முன்மொழிவுகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில், அவர்களுக்கு இலகுவாக கடல்-கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து (OCI) வழங்குங்கள்.
இந்திய தூதரகத்தில் செயற்படும், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) என்ற நிறுவனத்தின், நோக்கங்களை விரிவு படுத்தி, மலையக கல்வி வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும், இந்த இந்நிறுவனத்தின் ஊடாக செய்யுங்கள்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கான உதவி நோக்கங்கள்; வீடமைப்பு, பாடசாலை கல்வி, புலமை பரிசில்கள், பாடசாலை பௌதிக வளங்கள், பல்கலைக்கழக வளாக ஸ்தாபிதம், இந்தியாவின் நவோதயா பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலை, ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கலாசாலை, தொழில்-நுட்ப பயிற்சி கலாசாலை, கடல்-கடந்த இந்திய குடியுரிமை இலகு படுத்தல், ஆகிய பல்நோக்கு அடிப்படையிலும், அதேபோல் எமக்கான உதவி தொகை அதிகரிக்கப்படவும், வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன் வைப்போம்.
இந்த முன்மொழிவுகளை, இலங்கைக்கு விஜயம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஆகியோரிடமும் நாம் முன் வைத்து உள்ளோம்.
இவற்றை இம்முறை மீண்டும் இந்திய உப-ஜனாதிபதியிடமும் முன் வைக்க உள்ளோம். என்னுடன் கூட்டணியின் பிரதி தலைவர்கள் எம்பி பழனி திகாம்பரம், எம்பி வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.” என்றுள்ளது.











