முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது மிகச்சிறந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட ஹரின் பெர்னாண்டோ, மேலும் தெரிவித்ததாவது:-
“உலகளவில் வலதுசாரிக் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் நாட்டை வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய இருவருமே இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தலைவர்கள்.
இவர்களுடன் ஹர்ஷ டி சில்வா போன்ற பொருளாதாரத் திறமையாளர்கள் எங்களிடம் உள்ளனர்.
ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு நாடு பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என நாம் டிசம்பரில் கூறியபோது மக்கள் சிரித்தார்கள். தற்போது டொலர் மதிப்பு 325 ரூபாயில் செயற்கையாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது.
அரசு டொலர் விவகாரத்தில் ஒரு நெருப்பை மறைத்து வைத்துள்ளது. இது வெடிக்கும்போது டொலரின் மதிப்பு 350 ரூபாயைத் தாண்டும்.” – என்று அவர் எச்சரித்தார்.
உலகப் போரினால் தான் விலை உயர்வு எனச் சொல்லப்படுவதை மறுத்த அவர், இந்தியா அல்லது பங்களாதேஷில் இல்லாத விலை உயர்வு இலங்கையில் மட்டும் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டு அரசுக்கு ஆதரவாகப் பேசும் சிலரின் அறியாமையால்தான் நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.
“தொடர்ந்து இரண்டு முறை தவறு செய்துவிட்டோம் என்பதை மக்கள் இப்போது உணர்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் காலம் வரும்போது, இன்று அரசுக்கு ஆதரவாகப் பேசும் வீண் பேச்சுக்களுக்குப் பதில் கிடைத்துவிடும். நாம் தற்போது அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
நாட்டை உலகுக்கு அடையாளம் காட்டிய வலதுசாரிக் கொள்கைக்கு மக்கள் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.










