பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆளுகைக்குட்பட்ட தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அங்கு வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு கைமாற்றுகின்ற கோரிக்கைக்கு காது கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
பெருந்தோட்ட நிறுவனங்கள் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட காணிகளுக்கான ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பாகவே குத்தகை காலத்தை அதிகரிக்கும்படி பெருந்தோட்ட நிறுவனங்களினால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் அரசாங்கமும் இந்த விடயத்தை பரிசீலனை செய்வதற்கு முனைப்பு காட்டுவதாக தெரிகிறது. அதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம்.
இந் நிலையில் பெருந்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் வசிக்கின்ற குடியிருப்புகள், காய்கறி தோட்டங்கள், கால்நடை வளர்ப்புக்கான புட்த்தரைகள் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு அவை தோட்ட குடியிருப்பு பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு உடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது.
மலையகத்தில் காணி உரிமையை வலியுறுத்தி காணியுரிமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் முனைப்புடன் செய்யப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இருக்கிறது. ஆனால் இது தொடர்பில் அரசாங்கமோ அல்லது பெருந்தோட்ட நிறுவனங்களோ விடயத்தை ஆழமாக சிந்திக்கத் தொடங்கவில்லை.
இந்நிலையில் குத்தகை ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமாக இருந்தால் குடியிருப்பாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகாரத் தரப்பினருக்கு கொடுக்க வேண்டிய காலம் இதுவாகும்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் உடன்பட்டு இருக்கிறது. இதை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் காணியுரிமைக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தை செவி சாய்க்க வைக்க வேண்டிய பொறுப்பு மலையக சமூகத்திடம் இருக்கிறது.
மலையக மக்களின் காணி உரிமை விடயத்தில் முழு மலையக சமூகமும் சேர்ந்து செயல்படுவது அவசியமாகும்.
தொழிலாளர் சமூகத்துடன் ஆசிரிய சமூகம், வர்த்தக சமூகம், மலையகத்திலிருந்து ஏனைய தொழில்துறைகளில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இணைந்து மலையக காணி உரிமைக்காக ஒரே புள்ளியில் ஒன்று சேர வேண்டும்.
அதேபோல சகல அரசியல் தொழிற்சங்க அமைப்புகளும் சேர்ந்து செயல்படுவது காணி உரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமையும் எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.










