தற்போது நிலவும் ‘எல் நினோ’ காலநிலை காரணமாக, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக, பேட்டரி மின்சக்தி சேமிப்பு அமைப்புகளின் பயன்பாட்டை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
அமைச்சர் கருணாதிலக்கவின் தகவலின்படி, பேட்டரி மின்சக்தி சேமிப்பு திட்டத்தின் முதலாவது கட்டத்தின் மூலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேசிய மின்சார அமைப்பில் 160 மெகாவாட் திறன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேலதிக மின்சக்தி சேமிப்பு திறன், நாட்டின் மின்சார கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், ‘எல் நினோ’ காலநிலையால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் காலங்களில் மாற்று ஆதரவாகவும் அமையும் என அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு காலநிலை மாற்றங்களால் மின்சார உற்பத்திக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை தயாராகி வரும் நிலையில், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.










