“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”

தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!

ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல்

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) முற்பகல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், வர்த்தக நட்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி, மீள்குடியேற்றம் மற்றும் காணி அடையாளங்காணும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலக மட்ட ரீதியாக தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

டித்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட், நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, தலவாக்கலை, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 18,266 குடும்பங்களைச் சேர்ந்த 61,833 நபர்கள் பாதிக்கப்பட்டதுடன், இதில் தோட்டப்பகுதிகளில் 675 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,565 வீடுகளும் முழுமையாக சேதமடைந்ததுடன், தோட்டப்பகுதிகளில் 612 வீடுகளும் கிராமப்புறங்களில் 153 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. அத்துடன் 93 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இங்கு விரிவாக ஆராய்ந்தார்.

வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்கள், தற்போதுள்ள மழைக்காலத்துடன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதற்கான காணி ஒதுக்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறும், அந்தக் காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை, அவ்விடத்திலேயே தற்காலிக வீடொன்றை விரைவாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிகப்பாரிய பேரழிவான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக அவற்றைத் வெற்றிகரமாகக் கடந்து, முதற்கட்டப் பணிகளில் கணிசமான பகுதியை முடிக்க முடிந்ததாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இதன் உண்மையான பலன்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமாயின், இந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்றும், எனவே மீள்குடியேற்றம் உள்ளிட்ட இரண்டாம் கட்டப் பணிகளையும் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிப்பதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் நாட்டில் ஏற்படாதவாறு, நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும், அங்கு வலுவான நிதி ஒழுக்கத்துடன் முக்கியமான அளவுகோல்களின் படி செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, அதன் பலன்களை விரைவாக மக்களுக்கு வழங்க அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீரஆரச்சி, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.ஜி. விஜேரத்ன, வி.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதா, பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன் ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles