மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!
– உடப்பு பகுதியில் பெருஞ்சோகம்
புத்தளம் மாவட்டம், உடப்பு – பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூனபிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பூனபிட்டிய களப்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் தேடியபோது, களப்புப் பகுதியில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
மரணத்துக்கான காரணம் நீரில் மூழ்கியதா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்களா என்பது குறித்து உடப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.










