பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க அஞ்சல் நிலையங்களைப் பாதுகாத்து, அவற்றை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் விசேட நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இப்புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற தபால் நிலையத்தின் மறுசீரமைப்புத் திறப்பு விழாவில், அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார (Ruwan Sathkumara), உப அஞ்சல் மா அதிபர், பிராந்திய அஞ்சல் மா அதிபர் மற்றும் பொகவந்தலாவை அஞ்சல் அதிபர் விஜேபிரசன்னா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அஞ்சல் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த அஞ்சல் அலுவலகம் மூலம், இப்பகுதி மக்களுக்கு இன்னும் விரைவான மற்றும் மேம்பட்ட அஞ்சல் சேவைகளை வழங்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles