லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

பின்னர் 197 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றவேளை ஆட்டமிழந்தார்.

மறுபுறம் மிரட்டலாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்ததுடன், 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பஞ்சாப் அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி, தங்களது பிளே-ஆஃப் சுற்றுக்கான தகுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles