தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
தேர்தல் முறைமை தொடர்பான சட்டம், அத்துடன் வாக்காளர்களைப் பதிவுசெய்யும் சட்டம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம், கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இக்குழுவினால் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
அத்துடன், மேற்கூறிய சட்டங்களைத் திருத்தியமைத்தல், சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடுவதும், தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் திருத்தங்களையும் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் பணியாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்துவது அவசியம் எனக் குழு தீர்மானிக்கும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணம் அல்லது அறிக்கையை சமர்ப்பிக்கக் கோருவதற்கும், குழு அவசியமெனக் கருதும் எழுத்துபூர்வமான அல்லது வாய்மொழியான அனைத்துச் சான்றுகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
அதேநேரம், குழுவின் பணிகளுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மற்றும் வல்லுநர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மதிப்பாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணங்கினர்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜே.சீ.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.










