ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 4 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
இதில் தர்மசாலாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 92 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நியூ சண்டிகாரில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 47 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்று நடையை கட்டியது.
இந்தநிலையில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது..
இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, ஆமதாபாத்தில் நாளை மறுநாள் நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டும். தோல்வி அடையும் அணி வெளியேறும்.










