அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் நேற்றுமுன்தினம் முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்தே அவர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண் தானம்
இறுதி உயில்
இதேவேளை, தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும், இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களுடன் உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகளுக்கு அவசர விடுக்கோள் விடுத்துள்ளார்.
அத்துடன், தமக்கு ஏதேனும் நேர்ந்தாலும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகளின்
தொடர் போராட்டம்
சுரேஷ் சலே நடத்தப்படும் கொடூரமான முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை முதல் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுக்க சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ச்சியாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
