அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மன்றாசி நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவின் சிறப்பு நடவடிக்கையினால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் சந்தேக நபர்கள் இருவரும் அக்கரப்பத்தனை மற்றும் டிக்கோயா பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.










