கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும் இந்த பிரதான வீதி, கடந்த பல வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில், குன்றும் குழியுமாக காணப்பட்டு வந்தது. இதனால் இந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் வீதியில் நீர் தேங்குவதுடன், குழிகள் மேலும் பெரிதாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த முக்கியமான வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வீதியை கொங்கிறீட் இட்டு புனரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 15ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுல மேரி தலைமையில் நடைபெற்றது.
இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் எரிங்டன் பகுதியில் நேரடியாக வசிக்கும் சுமார் 300 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், ரொப்கில், எரிங்டன் உள்ளிட்ட அதனை அண்டிய பல பகுதிகளைச் சேர்ந்த மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களும் இதன் மூலம் பயனடையவுள்ளனர்.
பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், அவசர மருத்துவ சேவைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் அன்றாட பயணங்களுக்கும் இந்த வீதி புனரமைப்பு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீதிக்கு நிரந்தரத் தீர்வொன்று கிடைத்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுல மேரி, வட்டார உறுப்பினர் அமித ஆனந்த, பிரஜாசக்தி தலைவர் சுனில் வீரசிங்க, குடாஓயா வட்டார பிரஜாசக்தி தலைவர் லோகநாதன், அமைப்பாளர் கிருஸ்ணன் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்










