“ தேசிய வளங்களை பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை விற்கின்றனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”
இவ்வாறு கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ எமது நாட்டை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக எமது எதிரணி தலைவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இந்த சமருக்கு கண்டி மண்ணில் இருந்து நாமும் எமது ஆதரவை வழங்க வேண்டும்.
டித்வா சூறாவளியால் எமது கண்டி மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் மீள் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. எனவே, இந்த ஆட்சியாளர்களால் முடியாது என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
தேசிய வளங்களைப் பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், கண்டி மாவட்டத்தில் தோட்டங்கள் ஏலம்போட்டு விற்பனை செய்துவருகின்றனர்.
காணி மட்டும் அல்ல தொழிற்சாலைகள், பங்களாக்களும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, நாம் இதற்கு எதிராக போராட வேண்டும்.
எனவே, அடுத்து வரும் சில மாதங்களில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டியடித்து, இந்நாட்டுக்கு சுபீட்சமான அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்.
கண்டி மாவட்ட தமிழ் பேசும் பிரதிநிதிகள் எனக் கூறிச்சென்ற அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதிகள் தற்போது எங்கே என்று தெரியவில்லை.
மக்கள் ஏன் தமக்கு வாக்களித்து அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார் வேலுகுமார்.










